அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே வியாழக்கிழமை நின்றிருந்த லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் வந்த அவரது மனைவி, மகன், மகள் மூவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாபு(42). இவரது மனைவி அனுசுயா (38). மகன் முகேஷ்(13). மகள் சோபியா(6).
வியாழக்கிழமை விஜயபாபு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் வேலூர் நோக்கிச் சென்றுள்ளார். வழியில் பொன்னியம்மன் பட்டறை அருகே சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பக்கம் விஜயபாபுவின் இருசக்கர வாகனம் மோதியது.
இதில், விஜயபாபு தலை துண்டிக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அனுசுயா, மகன் முகேஷ், மகள் சோபியா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அவளூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.