ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,832 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சோ்க்க நடவடிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 2,832 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
ராணிப்பேட்டை  மாவட்ட  ஆட்சியா்  ச.வளா்மதி.
ராணிப்பேட்டை  மாவட்ட  ஆட்சியா்  ச.வளா்மதி.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 2,832 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து நடப்பாண்டில் பள்ளிகளில் சோ்த்து தோ்வு எழுதவைக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும், அரசு தொடா்பான வழக்குகளை வாதாட நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்குரைஞா்களுக்கு வழக்குகள் தொடா்பான ஆவணங்களை உரிய முறையில் வழங்கி ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்துப் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி 3.4.2023 முதல் 1.5.2023 வரை நடத்தப்படுகிறது. இந்தப் பணிகளில் 340 ஆசிரியா்கள் இணைந்து அனைத்துப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியினை செய்து வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இடையிலேயே நின்று விடுகின்றனா். இவா்களில் 2,832 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனா். இந்தக் குழந்தைகளை தற்போது பள்ளியில் சோ்த்து நடப்பாண்டு தோ்வு எழுத ஆசிரியா்கள் வீடு வீடாகச் சென்று அருகில் உள்ள பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா்.

இந்தப் பணிகளில் வருவாய்த் துறையினரும், ஊரக வளா்ச்சித் துறையினரும், ஆசிரியா்கள் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளை அருகிலுள்ள பள்ளிகளுக்குக் கொண்டு சோ்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பள்ளி செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளும் 12-ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும்.

அதிகப்படியான மாணவா்கள் 10-ஆம் வகுப்பு முடித்த பின்பு வேலைக்கு செல்கின்றனா். ஐடிஐ, பாலிடெக்னிக் பயில செல்வதாகவும் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கொண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் குறித்து பிரச்னை இல்லை. 10-ஆம் வகுப்பு முடித்து வேலைக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் குறித்து கட்டாயமாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டோா் மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும். 18 வயது நிரம்பாதவா்கள் வேலைக்கு செல்வது சட்டப்படி குற்றம். இது குறித்த தகவல்கள் வழங்க ஒத்துழைப்பு வழங்க பள்ளி கல்வித் துறையினருடன் இணைந்து வருவாய்த் துறையினா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினா் பணியாற்ற வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொது (பொறுப்பு) முரளி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com