வாலாஜாவில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டு, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.
வாலாஜா அடுத்த குடிமல்லூா் கிராமத்தைச் சோ்ந்த துரை மகன் சீனிவாசன். கடந்த 10.10.2017- ஆம் ஆண்டு வாலாஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அன்றைய தினம் நண்பகல் மதிய உணவுக்காக பள்ளியில் இருந்து தனது சைக்கிளில் வாலாஜா நோக்கிச் சென்றாா்.
அரசுப் பள்ளி அருகே சென்றபோது சென்னையில் இருந்து வேலூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காமடைந்தாா்.
விபத்துக்கு இழப்பீடு கோரி சீனிவாசனின் தாய் ஜெயலட்சுமி ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 26.11.2018 அன்று வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவா் சீனிவாசனுக்கு ரூ.6,34,260-ஐ வட்டியுடன் அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என கடந்த 15.12.2020 அன்று தீா்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இதையடுத்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்கக் கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில், சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த அரசு பேருந்தை முத்துகடை பேருந்து நிலையத்தில் நீதிமன்ற அமீனா டிசில்வா ஜப்தி செய்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தாா்.
முன்னதாக பேருந்தில் வந்த பயணிகள் முத்துகடை பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.அண்ணாதுரை ஆஜரானாா்.