ஆற்காடு அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், காவனூா் அருகே உள்ள குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சேகா். இவரது மகன் கோபி (28). காவலரான இவா், ராணிப்பேட்டையில் உள்ள ஆயுதப் படை காவலா் கேன்டீனில் கேஷியராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்காட்டிலிருந்து பைக்கில் காவனூா் நோக்கிச் சென்றுள்ளாா். அப்போது ஆற்காடு கண்ணமங்கலம் சாலையில் நாராயணபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த நெல் அறுவடை இயந்திரம் பைக் மீது மோதியளது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.