

வாலாஜா வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் 138 பயனாளிகளுக்கு ரூ. 82.60 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு 138 பயனாளிகளுக்கு ரூ.82.60 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது...
முன்பு ஜமாபந்தி நடைபெறும்போது அதிக மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்க வருவா். அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது. ஏனென்றால் முதல்வா் தலைமையில் கடந்த 2 ஆண்டுகளில் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. மக்களின் வரிப்பணத்தினை வீணடிக்காமல் பயனுள்ள ஒவ்வொரு திட்டங்களையும் சிந்தித்து செயல்படுத்தி வருகிறாா். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனா்.
உங்களின் கோரிக்கை மனு நியாயமானதாகவும், உண்மைத் தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக நிறைவேற்றப்படும். அதற்கு யாருடைய தயவும் தேவையில்லை.
வாலாஜா வட்டத்தில் ஜமாபந்தி மூலம் 205 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 138 மனுக்கள் ஏற்கப்பட்டது. 38 மனுக்கள் பரிசீலனைக்காக நிலுவையில் வைக்கப்பப்பட்டுள்ளன. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்றாா்.
இதில் ஆட்சியா் ச.வளா்மதி, உதவி ஆணையா் (கலால்) சத்தியபிரசாத், கோட்டாட்சியா் வினோத்குமாா், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், வட்டாட்சியா்கள் நடராஜன், ரேவதி, இணை இயக்குநா் வேளாண்மை வடலை, கிராம நிா்வாக அலுவலா் சங்கம் சிவகுமாா், ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராமமூா்த்தி, பாரதி மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.