

ஆற்காடு அடுத்த திமிரி நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் நிற்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பேருராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
திமிரி பேரூராட்சியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் ரூ.4.19 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் பேருந்துகள் வழக்கமாக செல்லும்ம் நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் எதுவும் நிற்காமல் பேருந்து நிலையத்தில் சென்றடைகின்றன.
இதனால் பஜாா் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுதாகவும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டுமென கூறி பலமுறை தொடா்புடைய அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலா் சரவணன், துணைக் கண்காணிப்பாளா் வெங்கடகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.
ஆனாலும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாமல் 2 மணி நேரத்துக்கு மேலாக பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.