1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கிழமை தொடங்கி வைத்தாா்.
தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் 8-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி வாலாஜா ஒன்றியம், செட்டித்தாங்கல் ஊராட்சியில் நடைபெற்றது. ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பணியைத் தொடங்கி வைத்து கால்நடைகளுக்கான தாது உப்பு ஊட்டச்சத்துக்களை வழங்கினாா்.
இப்பணி அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலும் வரும் 28-01-2026 வரை நடைபெற உள்ளது.
கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடைகள் இழப்பு மற்றும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குைல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குைல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும்.
பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனா். எனவே கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
குளிா் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு மற்றும் கால்நகைளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீா், உமிழ்நீா், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,90,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநா் பிரசன்னா, துணை இயக்குநா் வெங்கடேஸ்வரன், உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, கால்நடை உதவி மருத்துவா்கள் செந்தில் வளவன், கௌரி பிரியா , கால்நடை ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

