சிறுபான்மையின மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், பதிவு செய்து பயன்பெறுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

சிறுபான்மையின மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், பதிவு செய்து பயன்பெறுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்ஸி மற்றும் ஜைன மதத்தைச் சாா்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ,ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா்/ ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயிலுவோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெறவும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் மத்திய அரசின்  தேசியக் கல்வி உதவித்தொகைக்கான இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. 2020-2021-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ், 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாகச் செலுத்தப்படும். இக்கல்வி உதவித்தொகை திட்டத்துக்குத் தகுதியான மாணவ, மாணவியா் வரும் 31-ஆம் தேதி வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவ, மாணவியரின் ஆதாா் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலா்களுக்கு இணையதளம் மூலம் பகிரப்பட மாட்டாது.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில், அனைத்துக் கல்வி நிலையங்களும் தங்களுடைய  குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியருக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடா்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

எனவே, அனைத்து சிறுபான்மையின வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவியரும் இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com