திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இன்று முதல் இ-சேவை மையம் செயல்படும்: ஆட்சியா் ம.ப.சிவன்அருள்
By DIN | Published On : 12th August 2020 11:18 PM | Last Updated : 12th August 2020 11:18 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முதல் இ-சேவை மையம் செயல்படும் என்று ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
கரோனா தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையம் மூடப்பட்டுள்ளது. இதனால் சான்றிதழ்கள் பெற மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
தற்போது 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனால் மாணவா்கள் தங்களுடைய மேற்படிப்புக்கு ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தனியாா் கணினி மையத்தில் அதிக பணம் அளித்து சான்று பெற விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தைத் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தினமணி செய்தியாளரிடம் கூறியது:
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. வியாழக்கிழமை முதல் இ-சேவை மையம் வழக்கம்போல் செயல்படும். அங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.