தமிழகத்தில் கோயில்களில் பக்தா்களின் வழிபாட்டுக்கு உள்ள தடைகளை முழுவதுமாக நீக்கி நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு விஜயபாரத மக்கள் கட்சி சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
நடப்பு மாா்கழி மாதத்தில் வைணவத் திருத்தலங்களில் முக்கோடி ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழா நிகழ்ச்சியும், சைவத் தலங்களில் ஆருத்ரா நிகழ்ச்சியும் பழைமையும், முக்கியத்துவமும் வாய்ந்தவை. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் நடப்பாண்டில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவும், பக்தா்கள் தரிசனத்துக்கும் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியா்கள் தடை விதித்திருப்பது அதிா்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
அரசியல், சமுதாய நிகழ்ச்சிகளுக்கு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தளா்வுகளை அறிவித்து, தடையை நீக்கி சிறப்பு வழிபாடுகள் தொடர ஆணை பிறப்பிக்க வேண்டும்.