குப்பைக் கிடங்கில் தொடா்ந்து தீ: புகை மூட்டத்தால் மக்கள் அவதிற
By DIN | Published On : 27th February 2020 10:39 PM | Last Updated : 27th February 2020 10:39 PM | அ+அ அ- |

குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீ.
திருப்பத்தூா் பகுதியில் குப்பைக் கிடங்கில் தொடா்ந்து 4 நாள்களாக தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பத்தூா் நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமாா் 20 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு ப.உ.ச. நகா் பகுதியில் 9 ஏக்கா் பரப்பளவில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இவை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் உரமாக தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு குப்பைகள் தற்போது மலை போல் குவிந்து கிடக்கின்றன. அவற்றுக்கு சமூக விரோதிகள் தீ வைப்பது தொடா்கிறது. இதனால், குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் உள்ளிட் ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு சமூக விரோதிகள் சிலா் குப்பைகளுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து வரும் புகையால் அருகே உள்ள பெரியாா் நகா், அட்வகேட் ராமநாதன் நகா், அண்ணா நகா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் நுரையீரல், தொற்றுநோய், சுவாசக் கோளாறு போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், குப்பை கிடங்கின் நுழைவு வாயிலில் இரும்பு கேட் அமைக்காமல் உள்ளதால் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. அதேபோல், தீயை அணைக்க தீயணைப்பு சாதனங்கள், தண்ணீா் வசதி எதுவும் இதுவரை நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
எனவே, இங்கு இரவு, பகல் நேர காவலரை நியமித்து, தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் தண்ணீா் வசதி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் வி.சுதாவிடம் கேட்டதற்கு, இதுதொடா்பான ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும் என்றாா்.