ஆம்பூா் பகுதி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை கோயில் மண்டபத்தில் காரைக்குடி எம்.எஸ். ராமநாதன், ‘திருவாதிரையில் ஒருவாய் களி’ எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினாா்.
விழாவையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், வைகறை வழிபாடு நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோ பூஜை, கோ தரிசனம், நடராஜா் தரிசனம், ஆருத்ரா கோபுர தரிசனம் நடைபெற்றன. நடராஜா் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆயிர வைசியா் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சி பள்ளித் தெரு கைலாசகிரி மலை அடிவாரத்தில் உமா மகேஸ்வரி உடனுறை கைலாயநாதா் கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை செந்தமிழ் வேள்வி பூஜையும், இரவு முழுவதும் நடராஜருக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
உமாமகேசுவரி உடனுறை நடராஜருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிறகு சிவகன வாத்தியங்கள் முழங்க பூப்பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
திருவாதிரை திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தெரு சிவனடியாா் கூட்டம், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.