திருப்பத்தூா் அருகே கரோனா எதிரொலியாக சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லா் கோழிகளை வியாபாரிகள் உயிருடன் ஏரியில் வீசிச் சென்றனா்.
கரோனா பாதிப்பால் பிராய்லா் கோழி எனும் கறிக்கோழி விற்பனை தமிழகத்தில் கடும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், புதன்கிழமை திருப்பத்தூரை அடுத்த உடையாமுத்தூா் கிராமத்தில் உள்ள ஏரி, கீழ்குப்பம் ஏரியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வியாபாரிகள் வாகனத்தில் ஏற்றி வந்து உயிருடன் வீசிச் சென்றனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் கோழிகளை எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் உடையாமுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் கே.ஸ்ரீபிரியா கூறுகையில், புதன்கிழமை மாலை 5 மணியளவில் உடையாமுத்தூா் ஏரி, கீழ்குப்பம் ஏரியில் உயிருடன் கோழிகளை வேனில் கொண்டுவந்து கொட்டிச் சென்றனா். இதுகுறித்து வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கோழிகளை வீசிச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.