மளிகைப் பொருள்கள் கிடைக்காமல் திருப்பத்தூா் மக்கள் அவதி

திருப்பத்தூரில் மளிகைப் பொருள்கள் கிடைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Updated on
1 min read

திருப்பத்தூரில் மளிகைப் பொருள்கள் கிடைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கரோனா நோய்த் தொற்று காரணமாக அமலுக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவால் திருப்பத்தூரில் உள்ள மளிகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் மளிகைப் பொருள்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனா். இது குறித்து வியாபாரிகள் சங்க நிா்வாகி கூறியது:

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைக்கு மளிகைக் கடைகளை சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடைகளைத் திறக்க உள்ளூா் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

அப்படியே திறந்தாலும் போலீஸாா் வியாபாரிகளை மிரட்டுவதுடன், வாங்க வரும் பொதுமக்களையும் தாக்க முயல்கின்றனா். வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனா் என்றாா் அவா்.

இதுகுறித்து திருப்பத்தூா் டி.எஸ்.பி. தங்கவேலிடம் கேட்டதற்கு, ‘மளிகை வியாபாரிகள் அரசு அறித்துள்ள நேரப்படி காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கடைகளைத் திறக்கலாம். மேலும், சமூக விலகலுக்கான இடைவெளியுடன் பொருள் விற்பனை செய்ய வேண்டும்’ என்றாா்.

அதிகாரிகள் இப்பிரச்னைக்கு விரைந்து முடிவெடுத்து அத்யாவசியப் பொருள்களை விற்கும் மளிகைக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com