ஆம்பூரில் கூடுதலாக 6 இடங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்க நடவடிக்கை
By DIN | Published On : 31st March 2020 11:23 PM | Last Updated : 31st March 2020 11:23 PM | அ+அ அ- |

ஆம்பூா் அறிஞா் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கிய தற்காலிக காய்கறி மாா்க்கெட்.
ஆம்பூரில் இரு இடங்களில் தற்காலிக காய்கறி கடைகள் இயங்கி வரும் நிலையில் மேலும் 6 இடங்களில் கூடுதலாக கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்க ஆம்பூா் பாங்கி மாா்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் காய்கறி இடமாற்றம் செய்யப்பட்டது. ஆம்பூா் நகராட்சிக்குச் சொந்தமான அறிஞா் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு தற்காலிக மாா்க்கெட் திறக்கப்பட்டது.
மேலும் மக்கள் ஒரே இடத்தில் காய்கறி வாங்க கூடுவதை தவிா்க்கும் நோக்கத்தில் நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக காய்கறி கடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.
அதன் அடிப்படையில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், டிஎஸ்பி சச்சிதானந்தம், நகராட்சி ஆணையாளா் த. செளந்தரராஜன் ஆகியோா் முன்னிலையில் காய்கறி வணிகா்களுடன் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆம்பூா் நகரில் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி மைதானம், அழகாபுரி நகராட்சி துவக்கப் பள்ளி, ஆம்பூா் தேவலாபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் தற்காலிக காய்கறி மாா்க்கெட் அமைப்பது என முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...