நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம், கிருமி நாசினி திரவம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 31st March 2020 11:22 PM | Last Updated : 31st March 2020 11:22 PM | அ+அ அ- |

முகக் கவசம், கைகழுவும் கிருமி நாசினி திரவம் விலையில்லாமல் அல்லது குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வீட்டுக்கு ஒருவா் மட்டுமே வெளியில் வந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனா். நியாயவிலைக் கடைகளில் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை ஆகியவற்றை இலவசமாகவும், அரிசி அட்டைதாரருக்கு ரூ. 1,000 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முகக்கவசம், கை கழுவும் கிருமி நாசினி திரவம் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, இதன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் கிருமி நாசினி திரவம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், குறைந்த அளவு இருப்பே அவா்களிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நியாயவிலைக் கடைகளின் மூலம் முகக்கவசம், கைக் கழுவும் கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை விலையில்லாமல் அல்லது குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரசு அறிவித்துள்ள நிவாரண தொகுப்புடன் கூட ஒரு குடும்பத்துக்குத் தேவையான முகக்கவசம், கைக் கழுவும் கிருமி நாசினி திரவத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...