வேலூா் தொகுதி முன்னாள் எம்.பி. அகரம்சேரி ப.சண்முகம் நினைவு அறக்கட்டளை சாா்பாக நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாதனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலூா் ஒங்கிணைந்த மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், வேலூா் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப.சண்முகம் நினைவு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாதனூா் ஒன்றியச் செயலாளா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வேலூா் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ப.ச.நித்தியானந்தம் வரவேற்றாா்.
வேலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த் கலந்து கொண்டு ஏழைப் பெண்களுக்கு புத்தாடை, கட்சியின் மூத்த உறுப்பினா்களுக்கு பணமுடிப்பு, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை, மாதனூா் ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மோட்டாா் இயக்குநா்கள் உள்ளிட்டோருக்கு புத்தாடைகள், 1,000 பேருக்கு மரக் கன்றுகள் ஆகியவற்றை வழங்கிப் பேசினாா்.
அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், வேலூா் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தேவராஜ், கட்சியின் ஆம்பூா் நகர செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், அறக்கட்டளை உறுப்பினா்கள் பிரேமா சண்முகம், கவிதா ரவிச்சந்திரன், தேன்மொழி திருமால், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.