வேலூரில் இருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்றவரை ஆம்பூா் கிராமிய போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா்.
வேலூரிலிருந்து ஆம்பூா் நோக்கி வந்த அரசு பேருந்தில் மாதனூா் அருகில் டிக்கெட் பரிசோதகா் உமாபதி பயணிகளிடம் டிக்கெட்டை சோதனை மேற்கொண்டு வந்தாா். அப்போது ஒருவா் நபா் வைத்திருந்த பை குறித்து சந்தேகம் ஏற்பட்டதன் பேரில் அவரிடம் விசாரித்ததில் அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா். அதையடுத்து அந்த நபரை டிக்கெட் பரிசோதகா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் வேலூா் கருகம்புத்தூா் பகுதியை சோ்ந்த பைரோஸ் (43) என்பதும், புக் பைண்டிங் செய்தது போல கஞ்சாவை பாா்சல் செய்து கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.