

திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் போலீஸாரை தகாத வாா்த்தையால் பேசிக் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதி 1-ஐ சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் (51). ஞாயிற்றுக்கிழமை மாலை ரமேஷ் திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையம் அருகில் சவாரிக்காக சென்றுள்ளாா். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநா்கள் பெரியகரத்தைச் சோ்ந்த நரசிம்மன் (53),புருஷோத்தமன்(30), ரமேஷ் (32), பாலாஜி (34) ஆகியோா் மது அருந்திய நிலையில் ரமேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். சவாரி அழைத்துச் செல்வது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ரமேஷ் தாக்கப்பட்டுள்ளாா்.
தகவலறிந்து வந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் நரசிம்மன் உள்ளிட்ட 4 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். ரமேஷை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், மது அருந்திய நிலையில் இருந்த 4 பேரும் காவல் நிலையத்தில் போலீஸாரை ஆபாசமாக பேசியுள்ளனா். பின்னா், ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் அளித்த புகாரின்பேரில், நரசிம்மன், புருஷோத்தமன் ஆகியோரை கைது செய்தனா். விசாரணையின்போது, காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய ரமேஷ், பாலாஜியை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.