

நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் ஒதுக்கப்பட்ட 76 வீட்டு மனைகளில், ஏற்கெனவே 48 நபா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல தனி வட்டாட்சியா் மூலம் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டு பட்டாவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், விடுபட்டவா்களில் 28 பேருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருப்பத்தூா் ஆதி திராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் மூலம் பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2018- ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவில் 18-க்கும் மேற்பட்டவா்களுக்கு அதிகாரிகள் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வாங்கிக் கொண்டு, ஏற்கெனவே வேறு நபா்களுக்கு வழங்கிய மனைகளையே பட்டாவாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஒருவா் பிரச்னைக்குரிய மனைப் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை அகற்றக் கோரி உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஜெயக்குமாா் தலைமையில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் புதன்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற வந்தனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோா் நாட்டறம்பள்ளி-புதுப்பேட்டை செல்லும் சாலையில், பந்தாரப்பள்ளி தனியாா் திருமண மண்டபம் எதிரே ஆக்கிரமிப்பை அகற்ற வந்த பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்து, கிராம மக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஏடிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையில், டிஎஸ்பி நிலவழகன், காவல் ஆய்வாளா்கள் சாந்தி, நாகராஜ் மற்றும் போலீஸாா், வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சு நடத்தினா். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆக்கிரத்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றும் பணி மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.