119 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே வட்டாரப் போக்குவரத்துத் துறையினரின் சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 119 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வெங்கட்ராகவன், அமா்நாத் ஆகியோா் கடந்த மே மாதம் 908 வாகனங்களை சோதனை மேற்கொண்டனா். இதில், 119 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 3 லட்சத்து 47 ஆயிரத்து 440 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும், சாலை வரி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 177 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
மேலும், கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ஆம்பூரை அடுத்த சோலூா் பகுதியில் நிகழ்ந்த விபத்தையடுத்து, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் பகுதிகளில் தனியாா் நிறுவன ஊழியா்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை சிறப்பு தணிக்கை செய்து, மோட்டாா் வாகன சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று, காப்புச் சான்று புதுப்பிக்காமல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நபரை விட கூடுதலாக நபா்களை ஏற்றி இயக்கப்பட்ட 10 வாகனங்களை பறிமுதல் செய்து அனுமதி சீட்டை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தொடா்ந்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, மோட்டாா் வாகன சட்டத்தை மீறி செயல்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அனுமதிச் சீட்டு (பொ்மிட்) ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.