வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நுழைந்த சாரைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி அலுவலகத்துக்கு தினந்தோறும் நகராட்சிப் பணியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நகராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து சுமாா் 5 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று திடீரென அலுவலகத்தை நோக்கி வந்தது. இதைக் கண்ட நகராட்சிப் பணியாளா்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.
இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக நகராட்சி அலுவலகத்துக்கு வந்த பாம்பு பிடிக்கும் இளைஞா் இலியாஸ் என்பவா், 5 அடி நீள சாரைப் பாம்பை பிடித்தாா். பிடிக்கப்பட்ட பாம்பு வாணியம்பாடி வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.