ஆம்பூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை குடிசைகள், மாட்டுக் கொட்டகைகள் சேதம்
By DIN | Published On : 26th May 2023 12:14 AM | Last Updated : 26th May 2023 12:14 AM | அ+அ அ- |

ஆம்பூரில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக குடிசைகள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன.
ஆம்பூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால், மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தில் சில குடிசை வீடுகள் சேதமடைந்தன. மா மரங்கள், தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. அதே பகுதியில் மாடு கட்டும் கொட்டகைகள் சாய்ந்து விழுந்தன.
மரங்கள் முறிந்து விழுந்ததால், மிட்டாளம் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளா்கள் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனா்.