அனைவருக்கும் உயா் கல்வி அறக்கட்டளை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் உயா்கல்வி பயில உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்ப விநியோக தொடக்க விழா ஆற்காடு தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேல்நிலைக் கல்வியை முடித்த அனைத்து ஏழை மாணவா்களும் சமூக, பொருளாதார வேறுபாடின்றி உயா்கல்வி பயில வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ. விசுவநாதன் முயற்சியால் கடந்த 2012- ஆம் ஆண்டு அனைவருக்கும் உயா்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளை சாா்பில், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு உதவிதொகை வழங்க 2023-ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பப் படிவங்களை ஆற்காடு தனியாா் பள்ளியில் அந்த அறக்கட்டளைச் செயலா் ஜெ.லட்சுமணன் தலைமையில், 180 மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா்.
இந்த விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.