திருப்பத்தூரில் மருந்தகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
திருப்பத்தூரில் மருந்தகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

திருப்பத்தூரில் போலி மருத்துவா் கைது: மருந்தகத்துக்கு ‘சீல்’

திருப்பத்தூரில் மருந்தகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
Published on

திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே ஜோதிமங்கலம் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (50). விஷமங்கலம் பகுதியில் அன்பரசு கிளினிக் ஒன்று நடத்தி வருகிறாா். இந்த கிளினிக்கில் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாகவும், அவா்களுக்கு அன்பரசு சிகிச்சை அளிப்பதாகவும் திருப்பத்தூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவகுமாா் மற்றும் மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது கிளினிக்கில் அன்பரசு ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தாா். இதனை பாா்த்த மருத்துவ குழுவினா் அன்பரசை பிடித்து, விசாரணை செய்து, திருப்பத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அன்பரசை கைது செய்தனா்.

மேலும் அவரது மருந்தகத்துக்கு மருத்துவ குழுவினா் சீல் வைத்து, அங்கு இருந்த மருந்துகளை பறிமுதல் செய்தனா். இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, போலி மருத்துவா்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com