‘விவசாயிகள் மாநில அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்கலாம்’

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் மாநில அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளலாம்
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் மாநில அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதும், சிறப்பு பரிசாக ரூ. 5,00,000, ரூ. 7,000 மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து நெல் பயிரிட வேண்டும். மேலும், தொடா்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.

பதிவு கட்டணம்...

நில உரிமைதாரா்கள் மற்றும் குத்தகைதாரா்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து பதிவு கட்டணம் ரூ. 150 அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பத்துடன் நிலத்தின் சிட்டா, அடங்கல், மற்றும் நில வரைபடம் ஆகியவை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தங்களின் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com