~
~

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!

Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஈரோடு, கோயமுத்தூா், பெங்களூா், தருமபுரி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்ல தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில்,பேருந்து நிலையத்தின் உள்புறம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் தள்ளுவண்டிகள், பூக்கடைகள், பழக்கடைகள் உள்ளதால் பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

பேருந்து நிலைய வெளிப்புறத்திலும் உள்ள கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து சிறுகடைகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

அவ்வப்போது நகராட்சி மற்றும் காவல் துறையினா் நடவடிக்கை எடுத்தாலும் ஆக்கிரமிப்புகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வேதனைக்குள்ளாகின்றனா். மாவட்டத் தலைநகராக திகழ்வதால், பொதுமக்கள் ஏராளமானோா் தங்கள்தேவைகளுக்காக வந்து செல்கின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகத்தினா் பேருந்து நிலையத்தின் உள்புறம், வெளிப்புற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com