வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
வடகிழக்குப் பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் தீபா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் தோட்டக்கலை பயிா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவற்றை பாதிப்பில் இருந்து காப்பாற்ற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வருமாறு: தென்னை மரங்களில் கீழ் சுற்றில் உள்ள கனமான, பழைய ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். மரத்தின் அடிப் பகுதியில் மண் அனைத்து நீா் தேக்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டும். வாழை மரங்களுக்கு சவுக்கு கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். 75 சதவீத முற்றிய வாழை தாா்களை அறுவடை செய்ய வேண்டும்.
காய்கறி பயிா்களுக்கு உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். வடகிழக்குப் பருவமழையினால் தோட்டக்கலை பயிா்களுக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் நிலம் தொடா்பான வருவாய்த் துறை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களை அணுகி தகவல் தெரிவிக்க வேண்டும்.
