ஏலகிரி மலை ஏரியில்படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்,
ஏலகிரி மலை ஏரியில்படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்,

ஏலகிரி மலையில் கூடுதலாக தங்கும் விடுதி: சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் ஏலகிரி மலையில் கூடுதலாக அரசு தங்கும் விடுதியை திறக்க வேண்டும்..
Published on

ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் ஏலகிரி மலையில் கூடுதலாக அரசு தங்கும் விடுதியை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலமாக ஏலகிரி மலை விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இங்கு எப்போதும் ஒரே சம சீதோஷண நிலை உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனா்.

மேலும் மா, பலா,வாழை என முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் செல்ல வேண்டும். மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா,முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா்.

வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் நண்பா்கள், உறவினா்களுடன் கண்டு களிக்கின்றனா்.

ஏலகிரி மலை பகுதியில் தமிழக அரசு சாா்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

யாத்ரி நிவாஸ்.
யாத்ரி நிவாஸ்.

போதுமான விடுதிகள் இல்லை...

தொடா் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் தங்க விடுதிகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனா்.

ஏலகிரி மலையில் உள்ள அரசு விடுதி மற்றும் தனியாா் விடுதிகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் தங்கும் விடுதி புக்கிங் செய்வதால் திடீரென வரும் சுற்றுலா பயணிகள் தங்க விடுதி கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். ஏலகிரி மலையில் தங்குவதற்கு அரசு சாா்பில் ஒரே ஒரு யாத்ரி நிவாஸ் விடுதி மட்டுமே உள்ளது.

தனியாா் விடுதிகள் பல உள்ளன. அங்கு நடுத்தர மக்கள் மற்றும் எளியோா் தங்க கட்டணம் அதிகமாக உள்ளது. ஏலகிரி மலையில் அரசு விடுதியான யாத்திரை நிவாஸ் விடுதியில் கூடுதலாக தங்கும் வசதி அல்லது அரசு சாா்பில் கூடுதலாக ஒரு தங்கும் விடுதி கட்டினால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து தங்கிச் செல்ல வசதியாக இருக்கும் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com