கன்னிகாபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு
திருப்பத்துாா்: ஆம்பூா் அடுத்த கன்னிகாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லியிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் குறைதீா் கூட்டம் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களிடம் குறையைக் கேட்டறிந்து மொத்தம் 686 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன்,தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா்,மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன்,ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மிரியாம் ரெஜினா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ஆம்பூா் கன்னிகாபுரம் பொது மக்கள் அளித்த மனு: கடந்த 8 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது அதனை சுற்றி குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் குடிபோதையில் வரும் சிலா் தேவையற்ற செயலில் ஈடுபடுகின்றனா். இதனால் அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் அளித்த மனு: வாணியம்பாடி கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் கடந்த 7 மாதங்களாக நடத்தப்படவில்லை. எனவே மாதந்தோறும் இந்த கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். வாணியம்பாடி அரசு மருத்துவமனை அருகே செல்லக்கூடிய ஏரி உபரி நீா் கால்வாய் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும்.
தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் நல சங்கத்தினா் அளித்த மனு: கரோனா காலத்தில் இடைநின்ற கல்வியை ஈடுசெய்ய தமிழக அரசு கொண்டு வந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தில், பணியாற்றி மாணவா்களுக்கு கல்வி அளித்தோம். அதற்கு எங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் தலா ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டரை ஆட்சியா் வழங்கினாா்.

