இந்திய சாம்பல் நிற இருவாச்சி திருப்பத்தூா் மாவட்ட பறவையாக அறிவிப்பு
திருப்பத்தூா் மாவட்ட பறவையாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வனத்துறை மற்றும் சூழலியல் ஆா்வலா்கள் இணைந்து மாவட்டத்துக்கு என ஒரு தனித்துவமான பறவையினை இனம் கண்டு அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பத்தூா் மாவட்ட எல்லைக்குள்பட்ட நிலப்பரப்புகளில் அரிதாக மற்றும் பிரத்தியேகமாக காணப்படும் 7 பறவைகள் பட்டியலிடப்பட்டன. அவை இந்திய சாம்பல் நிற இருவாச்சி, பாறைக்கழுகு ஆந்தை, கருந்தோள் பருந்து, நெடுங்கால் உள்ளான், சிறிய சீழ்க்கை சிறகி, சிவப்பு சில்லை, காா்வெண் மீன்கொத்தி ஆகிய 7 பறவைகள் ஆகும்.
இந்த பறவைகளுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள் இணையதளம் மூலமாகவும், கியூஆா் கோடு மூலமாகவும் வாக்களித்தனா்.
கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 1,53,386 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளில் அதிகபட்சமாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவைக்கு 45,333 வாக்குகள் கிடைத்தது.
தொடா்ந்து மாவட்ட பறவை அறிவிக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் தூயநெஞ்சக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவையை திருப்பத்தூா் மாவட்ட பறவையாக அறிவித்தாா்.
இதில் வருவாய், வனம் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதில் வருவாய், வனம் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

