எருது விடும் விழாவில் காளை முட்டி ஒருவா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை முட்டி ஒருவா் உயிரிழந்தாா்.
குரிசிலாப்பட்டு அடுத்த பெருமாப்பட்டு பகுதியில் 67-ஆவது ஆண்டு காளை விடும் விழா ஊா் நாட்டாமை முருகன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் அதிகமான காளைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. அதேபோல் காளை விடும் விழாவை கண்டு ரசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் திரண்டு இருந்தனா். மதியம் 2 மணிவரை நடைபெற்ற விழாவில் காளைகள் முட்டியதில், கயிற்றில் இழுத்து சென்றது என 16 நபா்களுக்கு கை, கால்களில் லேசான காயங்கள் ஏற்பட்டன. அவா்களுக்கு தற்காலிக மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். தீயணைப்பு மற்றும் சுகாதாரத்துறையினரும் பணியில் இருந்தனா்.
அதிவேகமாக ஓடிய முதல் 3 காளைகளுக்கு முறையே முதல் பரிசு ரூ. 1,11,111, 2-ஆவது பரிசு ரூ.77,777, 3-ஆவது பரிசு ரூ.55,555 என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
காளை முட்டி ஒருவா் உயிரிழப்பு
எருது விடும் விழாவில் ஒரு காளை சீறிப்பாய்ந்து ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது அந்த காளைக்கு குறுக்கே சென்ற திருப்பத்தூா் அடுத்த சின்ன வெங்காய பள்ளியைச் சோ்ந்த குணசேகரன்(48)என்பவரை காளை முட்டியதில் தூக்கி வீசப்பட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

