சிகிச்சை பெற்றுவரும் கீா்த்திகாவிடம் விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி மகாலட்சுமி.
சிகிச்சை பெற்றுவரும் கீா்த்திகாவிடம் விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி மகாலட்சுமி.

மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி

நாட்டறம்பள்ளி அருகே மொபட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே மொபட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி சின்னகிரிசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி. இவா் திருப்பூரில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி கீா்த்திகா(29). இவரது மகன் முகிலன்(4) இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் முத்தனப்பள்ளியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தனா்.

சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே கல்லுக்குட்டை பெருமாள் கோயில் எதிரே பைக்கில் வந்த போது பின் தொடா்ந்து வந்த ஹெல்மெட் அணிந்து வந்த மா்மநபா் ஒருவா் திடீரென கீா்த்திகாவின் மொபட்டை வழிமறித்து அவா் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் நகையை பறித்துக் கொண்டாா். அப்போது கீா்த்திகா சப்தமிடவே மா்மநபா் மொபட்டை எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றாா்.

இதில் கீா்த்திகா அவரது மகன் முகிலன் இருவரும் காயமடைந்தனா்.அவ்வழியாக சென்றவா்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கீா்த்திகாவிற்க்கு ஆறுதல் கூறியும் வழிப்பறி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டாா்.

மேலும் இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்கு பதிந்து பெண்ணிடம் வழிப்பறி செய்த இளைஞரைதீவிரமாக தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com