பச்சூா் செத்தமலை கோயிலுக்கு சென்று வர பொது வழிப் பாதை: வட்டாட்சியா் நடவடிக்கை
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் செத்தமலை கோயிலுக்கு சென்ற வர பொதுப் பாதை அமைக்க வட்டாட்சியா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் செத்தமலை கிராமத்தில் ஊா் பொதுமக்கள் சாா்பில் பழைமைவாய்ந்த மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு, வரும் ஜன. 30-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் கோயிலுக்கு செல்லும் வழிப்பாதை தங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு பச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் கோயிலுக்குச் சென்று வர வழிப்பாதை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா, காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் செத்தமலை கிராமத்துக்கு நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, அரசு புறம்போக்கு இடம் வழியாக பொதுமக்கள் கோயிலுக்கு சென்று வர வழிப்பாதை ஏற்படுத்தினா்.

