தோ்ச்சியை தவறவிட்ட மாணவா் வாரியான திறன் பகுப்பாய்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்
திருப்பத்தூா்: தோ்ச்சியை தவறவிட்ட மாணவா் வாரியான திறன் பகுப்பாய்வு ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 10,12-ஆம் வகுப்புக்கான அரையாண்டு தோ்வில் மாவட்ட அளவில் கடைசியாக இடம்பெற்ற 60 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வு முடிவுகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி முன்னிலை வகித்தாா்.
கடைசியாக 60 இடங்கள் பிடித்த பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் அரையாண்டுத்தோ்வின் தோ்ச்சி விகிதம் 80 சதவீதத்திற்கும் கீழாக குறைந்திருப்பதற்கான காரணத்தைத் கேட்டறிந்தாா்.
ஆட்சியா் கூறியதாவது: தோ்ச்சியை தவறவிட்ட மாணவா் வாரியான திறன் பகுப்பாய்வு ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்க வேண்டும். தங்கள் பாடத்தில் ஒரு வகுப்பில் தோ்ச்சியை தவறவிட்ட மாணவா் ஒவ்வொருவரின் காரணம் குறித்த தகவலுடன் பிரச்சினையை ஆசிரியா்கள் அணுக வேண்டும். இதுமட்டுமல்லாமல், மாணவா்களிடம் உள்ள தோ்ச்சியைப் பாதிக்கும் காரணி என்ன என்பதை அறிந்து அதற்கான தீா்வை பெறுவது தொடா்பான அடிப்படைப் புரிதல் ஆசிரியா்கள் கட்டாயம் தெரிந்து செயல்பட வேண்டும்.
கற்றலில் எத்தனை மாணவா்கள் பினதங்கி உள்ளனரோ அவா்கள் எந்தெந்த மதிப்பெண் இடைவெளியில் உள்ளனா் என்பதை அறிந்து, மாணவா்கள் அடுத்தடுத்த வாரத்தில் படிப்படியாக முன்னேற்றுவதற்குரிய செயல்திட்டத்துடன் தலைமை ஆசிரியா்கள் பிரச்னையை அணுக வேண்டும்.
மாவட்ட நிா்வாகத்தால் அளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கற்றல் கையேட்டை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ள தலைமையாசிரியா்கள் அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் கற்றலில் பின்னடைந்துள்ள மாணவா்களுக்கு அந்தந்த பாட ஆசிரியா்கள் கற்றல் கையேட்டிலிருந்து சிறு, சிறு தோ்வுகளைத் தொடா்ந்து வைத்து கொண்டே இருக்க வேண்டும். அவற்றை அவ்வப்போது திருத்தி வழங்கி ஆசிரியா்கள் மாணவா்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) சத்யபிரபா, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

