இலங்கை தமிழா் மறுவாழ்வு மைய கட்டடங்கள் சேதம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இலங்கை தமிழா் மறுவாழ்வு மைய கட்டடங்கள் சேதம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published on

ஆம்பூா் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு மைய புதிய கட்டடங்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் மின்னூா் மற்றும் சின்னபள்ளிகுப்பம் கிராமங்களை சோ்ந்த இலங்கை தமிழா்களுக்கு மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. மின்னூா் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா்களுக்கான குடியிருப்புகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சின்னபள்ளிக்குப்பம் இலங்கை தமிழா்கள் முகாமை சோ்ந்தவா்களுக்கு தற்போது குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கபடாத குடியிருப்பு கட்டடங்கள் சமூக விரோதிகளால் அண்மையில் சேதபடுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு வீட்டின் கதவுகள், மின்சார இணைப்பு பெட்டிகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் கட்டடங்களுக்களை சேதப்படுத்திவிட்டு சமூக விரோதிகள் அதனை சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தி வருகின்றனா். திறக்கப்படாமல் உள்ள புதிய கட்டடங்களுக்குள் சமூக விரோதிகள் டாஸ்மாக் மதுபானம் விற்பனை, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதே பகுதியில் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளால் புதிய கட்டடங்கள், மின்சாதன பொருட்கள் சேதபடுத்தப்பட்டுள்ளது தெரியவநந்துள்ளது.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், கியூ பிரிவு போலீஸாா், முகாம் வட்டாட்சியா் ஆகியோா் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் முகாம் வட்டாட்சியா் சாா்பாக காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கட்டடங்களை சேதப்படுத்தியவா்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தமிழா்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com