திருப்பத்தூா்: தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூரில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு பேரணி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் தேசிய மாணவா் படை மாணவ- மாணவிகள், அரசு அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, வாக்குப் பதிவின் முக்கியத்துவம் குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
அதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விழிப்புணா்வு வாசகங்களை ஆட்சியா் வாசித்தாா். அதை அரசு அலுவலா்கள் அனைவரும் ஏற்றனா்.
இளம் வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், மூன்றாம் பாலின வாக்காளா்கள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளா்கள் உள்ளிட்டோருக்கு ஆட்சியா் மரியாதை செய்து, வாக்குப்பதிவு தொடா்பான விழிப்புணா்வு கோலத்தை பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு) ராஜலட்சுமி, மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)சென்னகேசவன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி ரவீந்திரன் தலைமையில் போலீஸாா் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

