
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது: ஆட்சியர் ஆய்வு
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தேர்வு மையங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தேர்வு மையங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வு மையங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறியதாவது:
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைகிறது.
அரசு பொதுத் தேர்வில் இம்மாவட்டத்தில் 104 தேர்வு மையங்களில் 20,770 மாணவர்களும், 21,617 மாணவிகளும், பார்வையற்ற 24 மாணவர்கள் உள்பட மொத்தம் 42,387 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
104 தேர்வு மையங்களுக்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்வுக்கு 17 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வினாத்தாள் கட்டுக்காப்பாளராக அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவரும், மூத்த முதுகலை ஆசிரியர் ஒருவரும், மையம் ஒன்றுக்கு இரண்டு வினாத்தாள் காப்பாளர்கள் வீதம் 34 வினாத்தாள் காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக வினாத்தாள்கள் கொண்டு செல்ல 58 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் 20 மாணவர்கள் கொண்ட ஓர் அறைக்கு ஓர் உதவி கண்காணிப்பாளர் வீதம் 42,387 மாணவர்களுக்கு 2,170 உதவி கண்காணிப்பாளர்கள் பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுதல் போன்ற செயல்கள் நிகழா வண்ணம் தடுக்க முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 35 பேர் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்களும், மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் 20 பேர் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்களும், மெட்ரிக். பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையில் தலா 10 பேர் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு பேர் வரை நிரந்தரமாக கண்காணிக்க 250 நிரந்தர கண்காணிப்பு படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் சீதாலட்சுமி, திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர்
மோகன சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருத்தணியில்...
திருத்தணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தமிழ் முதல் தாள் தேர்வை 394 மாணவிகள் எழுதினர். அதேபோல் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 374 மாணவர்கள் தேர்வு எழுதினர். இங்கு தேர்வை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தயாளன் நேரில் ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





