நடைபாதை ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து அபாயம்

திருவள்ளூரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
நடைபாதை ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து அபாயம்
Published on
Updated on
1 min read

திருவள்ளூரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
திருவள்ளூர் -பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக திருப்பதி, சென்னை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆவடி பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும், வாகனங்களும் சென்று வருகின்றன. அதேபோல், காக்களூர், கும்மிடிப்பூண்டி , திருமழிசை தொழிற்பேட்டைகளில் இருந்து மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்த பொருள்களை பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் பெரிய அளவிலான சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. அதோடு, பள்ளி கல்லூரி பேருந்துகளும் சென்று வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் இச்சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருந்து வருகிறது. 
இதைக் கருத்தில் கொண்டு கடந்தாண்டு நகராட்சி மூலம் சாலை விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து சாலை விரிவாக்கம் செய்து, அதில் மழை நீர் வடிகால் கால்வாயும் அமைக்கப்பட்டது. 
இந்த கால்வாய் மீது மேல் தளம் அமைத்து, அதில் டைல்ஸ் கற்களும் பதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதியும், ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்பதற்காகவும் அதில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன. இதை பாதசாரிகள் பயன்படுத்தி வந்தனர். 
இதனால், ஓரளவு போக்குவரத்து நெருக்கடியில்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போதைய நிலையில், பாதுகாப்பு தடுப்புக் கம்பிகளை உடைத்துவிட்டு அந்த இடங்களை பூக்கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்க வருவோரும், வாங்க வருவோரும் சாலையோரத்தில் வாகனங்களையும் நிறுத்தி விடுகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஆறுமுகசாமி கூறுகையில், நகராட்சியில் பல்வேறு பகுதிகளில், நடை பாதைகள் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது போக்குவரத்துக்கும் , பொதுமக்களுக்கும் இடையூறாகவும் இருக்கிறது. திருவள்ளூர் -பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபாதையில் பூக்கடைக்காரர்கள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையுள்ளது. அதனால், நடைபாதை கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com