பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மழை நீர்வரத்து கால்வாயில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கழிவு நீர் குழாய்களை அதிகாரிகள் புதன்கிழமை மூடினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் தடப்பெரும்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 1,000-த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்காக முறையான கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இங்குள்ள சாய்நகர் பகுதியில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குழாய் இணைப்பு மூலம், பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மழை நீர் வரத்து கால்வாயில் கொண்டு சென்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழை நீர்வரத்து செல்லும் கால்வாய் பகுதியில் அமைந்துள்ள தசரதன் நகரில் வசிக்கும் மக்கள் சுகாதாரக் கேட்டால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அத்துடன் அவர்கள் நீர்வரத்து கால்வாயில் கழிவு நீரை விட எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர், பொன்னேரி கோட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக திருவேங்கடபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்தது. இதையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, வருவாய்த் துறை மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, திருவேங்கடபுரம் பகுதியில், மழை நீர் கால்வாயில் செல்லும் வகையில் இணைக்கப்பட்ட கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியேறும் குழாய்கள் மூடப்பட்டன. மேலும் தசரதன் நகர் பகுதியில் மழை நீர் செல்லும் கால்வாயில் இருந்த இதர ஆக்கிரமிப்புகளையும் அகற்றி மழை நீர் தங்கு தடையின்றி செல்வதற்கு வழி ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.