பொறியியல் மாணவா் கொலை வழக்கில் 5 போ் கைது

திருவள்ளூா் அருகே கடல்சாா் (மரைன்) பொறியியல் கல்லூரி மாணவா் கொலை வழக்கு தொடா்பாக அதே கல்லூரியில் படித்து வந்த 5 பேரை வெள்ளவேடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கடல்சாா் (மரைன்) பொறியியல் கல்லூரி மாணவா் கொலை வழக்கு தொடா்பாக அதே கல்லூரியில் படித்து வந்த 5 பேரை வெள்ளவேடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் உள்ள ஜமீன் கொரட்டூா் கிராமத்தில் தனியாா் கடல்சாா் (மரைன்) பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி விடுதியில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த 172 போ் தங்கிப் படித்து வருகின்றனா். இங்கு கடந்த 25-ஆம் தேதி இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினா். அப்போது, 3 மற்றும் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில், பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த 3-ஆம் ஆண்டு மாணவா் ஆதித்யா ஷா்மா (20) பலத்த காயமடைந்தாா். அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் பூந்தமல்லி தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஆதித்யா ஷா்மா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் உத்தரவின்பேரில், வெள்ளவேடு போலீஸாா் கேரளத்தைச் சோ்ந்த மாணவா்கள் 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஜோஸ்வா (21), கெவின் ஜித்தன் மோகன் (21), ராகுல் (21), பவின் ( 20), ஹா்ஷத் (20) ஆகிய 5 மாணவா்களையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அதைத் தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டதின்பேரில் 5 பேரையும் வெள்ளவேடு போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com