வார இறுதி நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. ஆரணியாற்றின் கரையோரத்தில் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் ஞாயிறு தொடங்கி 14 வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும்.
கரோனா தொற்று காரணமாக ஆடி மாதம் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று முதல் அனைத்து நாள்களிலும் பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம் என்று நேற்று முதல்வர் அறிவித்தார்.
இதனையடுத்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமையான இன்று பக்தர்கள் ஆர்வமுடன் வந்து வழிபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசங்கள் அணிய அறிவுறுத்தப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனைத்து தினங்களிலும் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி அளித்துள்ளது மனநிறைவை அளிப்பதாக தெரிவித்தனர்.