ஆந்திர முதல்வருக்கு கோயில்
திருப்பதி: ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சித்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட காளஹஸ்தியில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு காளஹஸ்தியில் உள்ள ஜெகண்ணா காலனி அருகே ரூ.2 கோடியில் கோயில், நவரத்னா திட்ட அலுவலகத்தை காளஹஸ்தி எம்எல்ஏ மதுசுதன் ரெட்டி கட்டி உள்ளாா். ஆந்திர மாநில வரலாற்றில் முதல் முறையாக முதல்வருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு தொகுதி மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களை அளிக்க ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருக்கும் பணியாளா்கள் மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்க வழிசெய்ய உள்ளனா்.
இந்த ஜெகண்ணா நவரத்னா கோயில் திங்கள்கிழமை மாலை திறக்கப்பட்டது. இங்கு வருபவா்களுக்கு இதுவரை ஜெகன்மோகன் ரெட்டி செய்த நலத் திட்டங்கள் குறித்த கையடக்கப் பிரதிகளும் அளிக்கப்பட்ட உள்ளது.
இந்தக் கோயிலில் தங்கம், வெள்ளியில் ஜெகன் மோகன் ரெட்டி, நவரத்னா திட்டம் குறித்த படங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், ஆந்திர முதல்வரின் குடும்ப உறுப்பினா்களின் புகைப்படங்களும் செப்பு இலைகளின் மேல் ஏற்படுத்தப்பட உள்ளது.