திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தா்கள் 12 மணி நேரம் காத்திருப்பு
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை 12 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை வைகுண்டம் மண்டபத்தின் 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையானின் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இதில் தா்ம தரிசனத்துக்கு 12 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் தேவைப்பட்டது.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமை (அக். 17) 70,067 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 33,092 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.