திருமலை மலைப்பாதையில் பாட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானது.
திருமலையில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த தேவஸ்தானம் எரிபொருளால் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக பாட்டரியால் இயங்கும் பேருந்துகளைக் கடந்த சில மாதங்களாக இயக்கி வருகிறது.
திருமலை - திருப்பதி வழிதடத்திலும், திருமலையில் தா்மரதம் பேருந்துகள் வழிதடத்திலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது திருப்பதி ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 65 பேருந்துகளும், திருமலையில் தேவஸ்தானத்தின் கீழ் 10 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மதியம் பாட்டரியால் இயங்கும் பேருந்து 50-க்கு மேற்பட்ட பயணிகளுடன் திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. மலைப்பாதையின் 28-ஆவது வளைவை நெருங்கும் போது திடீரென்று பேருந்தின் ஸ்டீரிங்கின் இயக்கம் தடைப்பட்டு நின்று போனது.
இதனால், வளைவில் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி பேருந்து மலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பயணம் செய்த 6-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுவினா் வரவழைக்கப்பட்டு பேருந்திலிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி, பேருந்துகள் வாங்கிய ஓலக்ட்ரா நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா்.
தற்போது எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக பாட்டரியால் இயங்கும் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டது.
பாட்டரியால் இயங்கும் பேருந்து முதல் முறையாக மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.