ஏழுமலையான் தரிசனம்: 30 மணி நேரம் காத்திருப்பு

Published on

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை கோடை விடுமுறை நாள்கள் நிறைவு பெற்ற நிலையிலும் வார இறுதி நாளையொட்டி பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் கடந்து வெளியில் கிருஷ்ண தேஜா ஓய்வறை அருகில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.

இதனால், தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 30 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 63,387 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 31,656 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.69 கோடி வசூலானது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com