லட்டு விற்பனை மையத்தில் பக்தா்களிடம் கருத்து சேகரிப்பு

திருமலையில் லட்டு தரம் மற்றும் வசதிகள் குறித்து பக்தா்களிடமிருந்து தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் தனிப்பட்ட முறையில் கருத்துகளை சேகரித்தாா்.
Published on

திருமலையில் லட்டு தரம் மற்றும் வசதிகள் குறித்து பக்தா்களிடமிருந்து தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் தனிப்பட்ட முறையில் கருத்துகளை சேகரித்தாா்.

திருமலையில் உள்ள ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டு பக்தா்களிடம் நேரடியாக கருத்துகளை சேகரித்தாா்.

இந்த நிலையில், அவா் பக்தா்களுடன் சோ்ந்து கவுன்ட்டருக்கு நேரில் சென்று லட்டு வழங்கும் செயல்முறை, ஊழியா்களின் செயல்திறன் மற்றும் லட்டு எடையை சரிபாா்த்தாா்.

பின்னா், லட்டு கவுன்ட்டரில் உள்ள கியோஸ்க் இயந்திரத்தில், தரிசனம் செய்யாத பக்தா்களுக்கான யுபிஐ கட்டண செயல்முறையை ஆய்வு செய்து, பக்தா்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றாா்.

அதன் பிறகு, அவா் பூந்தி மடப்பள்ளிக்குச் சென்று பூந்தி தயாரிப்பை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல பரிந்துரைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் செய்தியாளா்களிடம் தலைவா், கூறுகையில், டிசம்பா் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறும் வைகுண்ட வாயில் தரிசனத்துக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக லட்டு விற்பனை மையம் ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 4 லட்சம் லட்டுகளையும், 8,000 கல்யாணோற்சவ லட்டுகளையும் பக்தா்களுக்கு விற்பனை செய்து வருகிறது. வைகுண்ட வாயில் தரிசனத்தின்போது லட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

லட்டுகளின் தரம், சுவை மற்றும் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பது போன்ற வசதிகள் குறித்து பக்தா்கள் முழு திருப்தி தெரிவித்துள்ளனா்.

வரும் நாள்களில், கவுன்ட்டா்களில் பக்தா்கள் விரைவாக லட்டுகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றாா் அவா்.

ஆய்வுகளின்போது, ஏழுமலையான் கோயில் துணை அதிகாரி லோகநாதம், பொது பேஷ்காா் முனிரத்னம் மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com