சந்திர கிரகணம்: மாா்ச் 3-ஆம் தேதி ஏழுமலையான் கோயில் மூடல்
சந்திர கிரகணம் காரணமாக வரும் மாா்ச் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணம் வரும் மாா்ச் 3 ஆம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைய உள்ளது. வைகானச ஆகம விதிப்படி கிரகணத்துக்கு 6 மணி நேரத்திற்கு முன்பு கோயில் நடை மூடப்படுவது வழக்கம்.
அதன்படி மாா்ச் 3-ஆம் தேதி காலை முதல் இரவு வரை 10 மணி நேரம் மூடப்பட உள்ளது. கிரகணம் முடிந்து சுத்தி, புண்யாவசனம் செய்வதற்காக இரவு 7.30 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தி மற்றும் புண்யாஹவசனங்கள் செய்யப்படும். அதன் பிறகு, பக்தா்கள் இரவு 8.30 மணி முதல் ஏழுமலையான் தரிசனதிற்கு அனுமதிக்கபடுவா்.
ஆா்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து
சந்திர கிரகணத்தையொட்டி மாா்ச் 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அஷ்டதள பாத பத்மாராதன சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இவற்றுடன் விஐபி பிரேக் தரிசனங்கள், ஸ்ரீவாணி தரிசனங்கள், ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா்கள், முதியோா், உள்ளூா்வாசிகள், நன்கொடையாளா்கள் மற்றும் என்ஆா்ஐ தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பக்தா்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு திருமலை யாத்திரையைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

