திருவண்ணாமலை அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த விவசாயி சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலையை அடுத்த உண்ணாமலைபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (42). விவசாயி. இவா், சனிக்கிழமை வீட்டில் இருந்து விவசாய நிலத்துக்குச் சென்றாா். ஆனால், மீண்டும் அவா் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினா் அவரை நண்பா்கள், உறவினா்கள் வீடுகளில் தேடினா்.
இந்த நிலையில், விவசாய நிலத்தின் தண்ணீா் தொட்டி அருகே ஆனந்தன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்தன. தகவலறிந்த வானாபுரம் போலீஸாா் ஆனந்தன் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.