ஆரணி அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரம் சாய்ந்து மினி பேருந்தில் விழுந்ததில் ஓட்டுநா் உள்பட 10 பயணிகள் காயமடைந்தனா்.
ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் ஆரணியில் இருந்து சிறுமூா் கிராமத்திற்கு மினி பேருந்து சென்று விட்டு மீண்டும் ஆரணிக்கு வந்து கொண்டிருந்தது. குண்ணத்தூா் கூட்டுச் சாலை அருகே வரும்போது, சூறைக்காற்று வீசியதால் மரம் ஒன்று மினி பேருந்து மீது சாய்ந்தது.
இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து ஓட்டுநா் காயம் அடைந்தாா். மேலும் பயணிகளும் காயமடைந்தனா். காயமடைந்த ஓட்டுநா் உள்பட 10 போ் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவல் அறிந்த ஆரணி நெடுஞ்சாலை துறையினா் சென்று மினி பேருந்து மீது சாய்ந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.









